Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

துவாதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாதசித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.[1] இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பன்னிரண்டாவது திதி துவாதசி ஆகும். துவாதச எனும் வடமொழிச் சொல் பன்னிரண்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பன்னிரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பன்னிரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் துவாதசியைச் சுக்கில பட்சத் துவாதசி என்றும், பூரணையை அடுத்த துவாதசியைக் கிருட்ண பட்சத் துவாதசி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்

[தொகு]

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[2] துவாதசித் திதி பன்னிரண்டாவது திதியும் 27 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 132 பாகையில் இருந்து 144 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சத் துவாதசித் திதியும், 312 பாகையிலிருந்து 324 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் துவாதசியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்

[தொகு]

புத்த துவாதசி சிராவண மாதத்து வளர்பிறை துவாதசியை புத்த துவாதசி என்கின்றனர். இந்நாளில் திருமாலை வணங்க வேண்டும். [3] வாசதேவ துவாதசி ஆஷாட மாதத்தின் வளர்பிறை துவாதசியை வாசதேவ துவாதசி என்கின்றனர். திருமாலை வணங்குவதற்கு உரிய நாள்.[4]

ஆதாரம்

[தொகு]
  1. எஸ்.கோபாலகிருஷ்ணன் (15 நவம்பர் 2018). "திருவாரூரில் கைசிக புராணம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2018.
  2. Sharma, P.D., 2004. பக். 22.
  3. தினமலர் பக்திமலர் 20.08.2015 பக்கம் 3
  4. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 3

உசாத்துணைகள்

[தொகு]
  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாதசி&oldid=3577536" இலிருந்து மீள்விக்கப்பட்டது